வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் வேலணை பிரதேச செயலகமும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்து நடாத்திய பண்பாட்டுப் பெருவிழா பிரதேச செயலாளர் திரு.கயிலாயபிள்ளை சிவகரன் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (24.06.2025) நடைபெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக உயர்திரு. நாகலிங்கம் வேதநாயகன் கௌரவ ஆளுநர் அவர்கள் (வடக்கு மாகாணம்), அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக திரு. இலட்சுமணன் இளங்கோவன் - பிரதம செயலாளர் (ஓய்வு நிலை) வடக்கு மாகாணம், திருமதி. லாகினி நிருபராஜ் பிரதிப்பணிப்பாளர், பண்பாட்டலுவல்கள் அலகு (வடக்கு மாகாணம்) அவர்களும் கௌரவ விருந்தினராக கலாபூஷணம் மருதன் கந்தையா மூத்த கலைஞர், (சரவணை மேற்கு) அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். தீவகத்தின் பெருமை சேர்க்கும் நாடகக் கலைஞர் அமரர்.செல்லையா சிவராசா அவர்களின் ஞாபகார்த்த துறையூர் செல்லையா சிவராசா அரங்கில் இடம்பெற்ற பிரதேச பண்பாட்டு விழாவானது தீவகத்தின் பல்வேறுபட்ட கலை இலக்கிய கோணங்களை பிரதிபலித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பண்பாட்டு ஊர்வலம், ஊர்தி பவனியானது துறையூர் காளி கோயிலில் பூஜை ஆராதனைகளோடு ஆரம்பமாகி துறையூர் ஐயனார் சனசமூக நிலையத்தை வந்தடைந்தது. வேலணை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கலைமன்றங்களின் ஒத்துழைப்புடன் மயிலாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், காவடி, கும்மி, வசந்தனடி, என்பவற்றோடு வேலணை பிரதேச செயலக பிரிவினை சித்தரிக்கும் வகையில் ஊர்திப் பவனிகளும் மங்கல இசையோடு சிறப்பான முறையில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கலைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கல், கௌரவிப்பு நிகழ்வுகள், பண்பாட்டு பெருவிழாவில் பிரதேச செயலக பிரிவுகளை பிரதிபலிக்கும் ஊர்திகளுக்கான போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்கள் வழங்கல் என்பவற்றோடு வேலணை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தகுதிவாய்ந்த கலைஞர்களுக்கான 2025 ஆம் ஆண்டுக்கான கலைவாரிதி, மற்றும் இளங்கலைஞர், விருதுகள் என்பன வழங்கப்பட்டன.