எழுத்தாளர் திரு மார்க்கண்டு இளஞ்செழியன் எழுதிய "விடியாத இரவுகள்" சிறுகதை நூல் வேலணைப் பிரதேச செயலாளர் திரு கயிலாசபிள்ளை சிவகரன் அவர்களால் வேலணைப் பிரதேச செயலகத்தில் 2021.12.01ம் திகதி வெளியிட்டு வைக்கப்பட்டது.
பிற்பகல் 2.30 மணியளவில் மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமாகி மாணவியின் வரவேற்பு நடனத்துடன் விருந்தினர்களை வரவேற்றதனைத் தொடர்ந்து வரவேற்பு உரையினை திருமதி பிரதீபன் லெற்றிசியாராணி அவர்கள் நிகழ்த்தினார்.
தொடர்ந்து நிகழ்வினை தலைமைதாங்கிய திரு சுப்பிரமணியம் கஜேந்திரகுமார் அவர்கள் தலைமை உரையில் நீண்ட காலக் கனவு ஒன்று நிறைவேறியதையும் அதற்குத் துணையாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவிப்பதாகவும் தனது கருத்துக்களை முன்வைத்திருந்தார்.
தொடர்ந்து நிகழ்வின் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்த வேலணைப் பிரதேச செயலாளர் திரு கயிலாசபிள்ளை சிவகரன் அவர்கள் தமது உரையில் இலை மறை காயாக எமது பிரதேசத்தில் இருக்கும் எழுத்தாளர்களுக்கு கரங்கொடுக்கத் தயாராக இருப்பதாகவும், வேலணைக் கலாசாரப் பேரவை ஊடாக தொடந்து இவ்வாறான வெளியீடுகள் முன்னெடுக்கப்பட இருப்பதையும் குறிப்பிட்டதோடு எழுத்தாளருக்கு தமது வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடந்து சிறப்பு விருந்தினர் உரையில் ஆசிரியர் திரு அகஷ்ரீன் யஷ்ரீன் அவர்கள் ஏழ்மைதான் உன்னத படைப்பாளர்களை, எழுத்தாளர்களை உருவாக்குகிறது என்ற ரீதியில் அழகான கதை ஒன்றின் மூலம் தனது கருத்தை முன்வைத்தார்.
தொடர்ந்து விருந்தினர்கள் சபையோர் முன்னிலையில் "விடியாத இரவுகள்" சிறுகதை நூல் வேலணைப் பிரதேச செயலாளர் திரு கயிலாசபிள்ளை சிவகரன் அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது.
முதற்பிரதி, சிறப்புப்பிரதிகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து ஆசிரியர் திரு பாலசுந்தரம் ரஜிந்தன் அவர்களால் விடியாத இரவுகள்" சிறுகதை நூலுக்கான மதிப்பீட்டுரை நிகழ்த்தப்பட்டது அவ்வுரையில் குறிப்பாக ஈழத்துச் சிறுகதை வளர்ச்சிப்போக்கு முதல் வேலணையின் இலக்கிய ஆளுமைகள் ஈறாக தனது கன்னி நூலின் மூலமான நூலாசிரியரின் இலக்கியப் பிரவேசம் குறித்தும் நூலின் நிறைவான பக்கங்களையும் நிவர்த்தி செய்யப்பட வேண்டிய பக்கங்களையும் சுட்டிக்காட்டியதோடு இச் சிறுகதை நூல் கொண்டிருக்கும் சிறப்பான பண்புகளையும் பாரட்டிக் குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து நிகழ்வைச் சிறப்பாக ஒழுங்கமைத்திருந்த வேலணைப் பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் திருமதி ம.மேர்சி சுஜந்தினி அவர்கள் இன்றைய நிகழ்வு சிறப்புற நடைபெற பங்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு நூலாசிரியரையும் பாராட்டி தமது கருத்துக்களை முன்னவைத்தார்.
இறுதியாக நூலாசிரியர் திரு மார்க்கண்டு இளஞ்செழியன் அவர்கள் தமது ஏற்புரையில் வறுமையோடும் தமது எழுத்துப்பணியைத் தொடர்ந்தமை பற்றியும் அர்ப்ணிப்போடான கதைளை எழுதி முடித்தமை பற்றிய நினைவுகளையும் முன்வைத்ததோடு பத்திரிகை, மற்றும் துணையாக இருந்தவர்களையும் குறிப்பிட்டு நன்றிகளைத் தெரிவித்திருந்தார்.
நிறைவாக சபையோர்களின் ஆசியும் வாழ்த்துக்களும் நூலாசிரியரை சூழ்ந்து கொள்ள நிகழ்வு இனிதே நிறைவெய்தியது.


























