News
எமது பிரதேச செயலக 2020ம் ஆண்டுக்கான ஆரம்ப நாள் நிகழ்வு 2020.01.01ம் திகதி காலை 9.30 மணிக்கு பிரதேச செயலர் தலைமையில் கொடியேற்றலுடன் ஆரம்பமானது. இவ் ஆண்டுக்கான ஆரம்ப நாளில் மரநடுகை இடம்பெற்றதுடன் இயற்கை அனர்த்தம் மற்றும் போரினால் உயிரிழந்தவர்களுக்கான அகவணக்கம் செலுத்தப்பட்டு அரசாங்க சேவைக்கான சத்திய பிரமாணம் அனைத்து உத்தியோகத்தர்களாலும் எடுத்துக்கொள்ளப்பட்டது. பிரதேச செயலர் உரையை தொடர்ந்து உத்தியோகத்தர்கள் பலரால் புதுவருட வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டதுடன் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

காணாமற்போனோருக்கான சான்றிதழினை வழங்குதல்
வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் நிலவிய மோதல்களின் விளைவாக அல்லது அதன் பின் விளைவாக காணாமல் போனவர்கள் என அறிக்கையிடப்பட்டவர்களுக்கான விசாரணை 2019.11.05ம் திகதியிலிருந்து இடம்பெற்று காணாமற் போனோருக்கான சான்றிதழினை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 2019.12.30ம் திகதியிலிருந்து இவர்களுக்கான சான்றிதழ் எமது பிரதேச செயலகத்தினூடாக வழங்கப்படுகின்றது. இந் நடவடிக்கை காலவரையின்றி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கான நினைவு தினம் - 2019
2004ம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கான 15ம் ஆண்டுக்கான நினைவு கூரும் நிகழ்வு பிரதேச செயலர் தலைமையில் எமது பிரதேச செயலகத்தில் 2019.12.26ம் திகதி காலை 9.30 மணிக்கு அனுஸ்டிக்கப்பட்டது. கொடியேற்றத்துடன் ஆரம்பமான இந் நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கான மௌன அஞ்சலியை செலுத்தினர். தொடர்ந்து பிரதேச செயலரால் நினைவு தின உரை நிகழ்த்தப்பட்டதுடன் அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தரால் அனர்த்த பாதுகாப்பு தொடர்பாகவும் உரை நிகழ்த்தப்பட்டது.
வருடாந்த ஒன்று கூடலும் பிரிவுபசார நிகழ்வும் - 2019
2019ம் ஆண்டுக்கான வருடாந்த ஒன்று கூடலும் பிரிவுபசார நிகழ்வும் காலை 9.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் எமது பிரதேச செயலகத்தில் கடமையாற்றி 2019ம் ஆண்டு இடமாற்றம் பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்களுக்கும் ஓய்வு பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்களுக்குமான கௌரவிப்பு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து அவர்களின் அனுபவ பகிர்வும் ஏற்புரையும் நிகழ்த்தப்பட்டதுடன் பல்வேறு கலை நிகழ்வுகளும் மதிய போசனமும் இடம்பெற்றது.

ஒளி விழா - 2019
எமது பிரதேச செயலகத்தின் 2019ம் ஆண்டுக்கான ஒளி விழா திரு. சி. ராஜீவ் (உதவி பிரதேச செயலர், பிரதேச செயலகம், வேலணை) அவர்கள் தலைமையில் 2019.12.23ம் திகதி காலை 10.00 மணிக்கு செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.இவ் விழாவின் பிரதம விருந்தினராக அருட்பணி ம.டேவிட் (மறைக்கோட்ட முதல்வர், தீவகம்) அவர்கள் கலந்து கொண்டார். மெழுகுவர்த்தி பவனியுடன் ஆரம்பமான இவ் விழாவில் ஒளியேற்றல், வருகைப்பாடல், மன்றாட்டு நிகழ்வுகளை தொடர்ந்து எமது செயலக பிரிவிலுள்ள தேவாலய பங்கு மாணவர்களதும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களினதும் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றது. கலை நிகழ்வுகளில் பங்கு பற்றிய சிறுவர்களுக்கும் ஏனைய சிறார்களுக்கும் அன்பளிப்புகள் வழங்கப்பட்டு இவ் விழா சிறப்பாக நடைபெற்றது.



























